நரைமுடியை கருமையாக மாற்றும் ஹேர் ஆயில்
நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா, உங்கள் இளமையையும் சேர்த்து தான். ஆனால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும். இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை சற்று தாமதமானாலும் நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும்.
பீர்க்கங்காய் எண்ணெய்
இது இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது.
தேவையான பொருட்கள்
உலர்ந்த பீர்க்கங்காய் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
செய்முறை
பீர்க்கங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 4-5 நாட்கள் நிழலிலே காய வைக்க வேண்டும். இந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும். எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும். நன்றாக கொதித்த உடன் அதில் 1 ஸ்பூன் வெந்தயம் போட்டு அடுப்பை அணைத்து விடவும். வடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை
இதை வாரத்திற்கு மூன்று முறை அல்லது தினமும் என கூந்தல் மற்றும் மயிர்க்கால்களில் படும் படி தேய்த்து மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.
கறிவேப்பிலை எண்ணெய்
கறிவேப்பிலை உங்கள் சமையலை மட்டும் மணமாக்க போவதில்லை. உங்கள் கூந்தலையும் கருமையாக்கும். உண்மையை சொல்ல போனால் இது இயற்கை கொடுத்த வரம். இதை உங்கள் உணவுகளில் தொடர்ச்சியாக சேர்த்து வந்தாலே போதும் உங்கள் கூந்தல் கருகருவென அலைபாயும்.
தேவையானவை
தேங்காய் எண்ணெய் - 100 மில்லி லிட்டர்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு (தேவைக்கேற்ப)
செய்யும் முறை
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளுங்கள். அதை நன்றாக கொதிக்க விடவும். உங்கள் தேங்காய் எண்ணெய் உறைந்து இருந்தால் முதலில் அதை உருக்கி விட்டு பிறகு கறிவேப்பிலை சேர்த்து சூடுபடுத்தவும். கறிவேப்பிலை கருப்பு நிறத்தில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொள்ளவும்.
இந்த ஆயிலை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது தூங்குவதற்கு முன் உங்கள் கூந்தலில் தேய்த்து நன்றாக மயிர்க்கால்களில் படும் படி 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் ஷாம்பு அல்லது சிகைக்காய் தேய்த்து கூந்தலை அலசி விடுங்கள். இதை 3 மாதத்திற்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி சத்து கூந்தலை பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. இவை இளநரையை தடுத்து முடிகள் அடர்த்தியாகவும் நன்றாக வளரவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் (பொடி தயாரிப்பு பின்வருமாறு காணலாம்)
வெந்தய பொடி - 1 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
செய்முறை
நெல்லிக்காயை நறுக்கி நிழலில் சுருள காய வைத்து எடுக்கவும். நன்றாக காய்ந்ததும் பொடியாக அரைத்து கொள்ளவும். நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், வெந்தயம் இவற்றை ஒரு கடாயில் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும். எண்ணெய் பழுப்பு நிறத்தில் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். ஆற விடவும். எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து கொள்ளவும்
இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை என கூந்தல் மற்றும் மயிர்க்கால்களில் படும் படி தேய்த்து மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.
இதை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் உபயோகப்படுத்தலாம். இரவில் மயிர்க்கால்களில் படும் படி தேய்த்து நல்ல மசாஜ் செய்து ஊறவைத்து விடுங்கள். மறுநாள் நீங்கள் எப்போதும் போல தலைக்கு குளித்து விடலாம். நீங்கள் எப்போதெல்லாம் தலைக்கு குளிப்பீர்களோ அப்போதெல்லாம் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி நல்ல மாற்றத்தை காணுங்கள்.