மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம்
நம் உடலில் சேரும் கழிவுப் பொருட்கள் மற்றும் ரத்தத்தில் தேக்கமடையும் கழிவு பொருட்களை அவ்வப்போது நீக்கப்பட வேண்டும் எனில் எளிமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு அவசியம்.
அப்படியான பயிற்சிகளில் யோகாசனப் பயிற்சியை சிறந்தது எனலாம். இது உடலை பிற பயிற்சிகளை போல் இருக்க செய்வதில்லை. எனவே அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் ரத்தம் பாய்ந்து ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.
நாம் இங்கு பார்க்கப்போவது மன அழுத்தத்தை போக்கும் பாலாசனம் என்னும் பயிற்சியை.
பாலப் பருவம் என்றால் குழந்தைப் பருவத்தை குறிக்கும். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்ந்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்று கொள்ள வலியுறுத்துவதால் இதற்கு “பாலாசனம்” என்று பெயர்.
இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம்.
செய்முறை
இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல் முழங்கால்கள் மீது அமரவும். அதன் பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பது போல் நெற்றி தரையில் படும்படி குனியவும்.
மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அமரவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து உட்காரவும். சில வினாடிகள் ஓய்வுக்குப் பின் மீண்டும் முன்போல் பயிற்சி எடுக்கவும். இதே போன்று ஐந்து அல்லது ஆறு முறை பயிற்சி செய்யலாம்.
பலன்கள்
இது மன அழுத்தத்தை நீக்குகிறது. தண்டுவட நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது. முதுகு வலியை குணப்படுத்துகிறது. உணவு செரிமானம் ஆகும் திறனை அதிகரிக்கிறது. தொப்பையை நீக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளைப் போக்குகிறது. கால்கள், முட்டி முதல் பாதம் வரை பலம் பெறுகிறது.